Posts

[agathiyar] Samana Vs Ajivaka

http://groups.yahoo.com/group/agathiyar/messages

banukumar rajendran

சமீபத்தில் என் நண்பர் திருப்பதிசாமி தொலைபேசியில் அழைத்து சிலப்பதிகாரம்,
சிற்றண்ணவாயில் ஆகியவை ஆசிவகம் சார்ந்தது என்று பேரா.க.நெடுஞ்செழியன்
என்பார் புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல்
நேரிலே வந்து பேரா.க.நெடுஞ்செழியனின் அந்த இரண்டு புத்தகங்களையும் பரிசாக
கொடுத்தார். படித்துவிட்டு இதற்கு தக்க மறுப்பு எழுதுமாறும் கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் நிறைய சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. அவ்வளவு சிரமப்பட்டு என்ன
பயன்? சான்றுகள் காட்ட முடியாமல் தன் கற்பனையையே சான்றுகளாகக் காட்ட
போந்துள்ளார். ஆசிவகம் பற்றி நிறைய எழுத்தாளர்கள் தன் மனப்போன போக்கில்
எழுதியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் ஒன்றாகத்தான் கருத
வேண்டியுள்ளது.

சிரமண சமயப் பிரிவில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் சமயங்களில் ஆசிவகமும்
ஒன்று. இதன் நிறுவனர் “மற்கலி கோசர்” என்பார். இவர் மகாவீரர், புத்தர் ஆகியவர்களின்
சமகாலத்தவராகக் கருதப்படுகிறார். இவரைப் பற்றி அறிந்துகொள்ள நேரிடையான
ஆதாரங்களோ நூற்களோ ஏதும் கிடைத்தில. ஆயினும் இவரைப் பற்றியும் இவரின்
சமயம் பற்றியும் அறிந்துக்கொள்ள மற்ற சிரமண சமய நூல்கள் நமக்கு பேருதவியாக
திகழ்கின்றன.

சாத்தன் = மற்கலி என்கிறார் நம் பேராசிரியர். அதற்கு அவர் எந்த வலுவான
சான்றுகளைக் கொடுத்தாரில்லை. சாத்தன் என்ற பெயர் பொதுவாக புத்தரையும்,
மகாவீரரையும்க் குறிக்கும். அதிலும், குறிப்பாக புத்தரை அச்சொல் சுட்டும். புத்த
பிரனை மட்டுமின்றி புத்த துறவிகளையும் அச்சொல் குறிக்கும் என்று பெளத்த
இலக்கியங்களிலும் சான்று பகர்கின்றன. தமிழில் தோன்றிய சமண (ஜைன)
முனிவரால் இயற்றப்பட்ட மங்கா புகழ் நிகண்டான “சூடாமணி நிகண்டு”
அதற்குச் சான்றாக அரண் செய்யும். மற்கலி கோசருக்கு “சாத்தன்” என்று
தமிழ் இலக்கியங்களில் உரையின்மையாலும், அதற்கு வேறு சான்றுகள்
இல்லாமையாலும் இதை உணரலாம். மேலும், பெளத்த காப்பியமான

“மணிமேகலை”யை இயற்றியவர் “சீத்தலை சாத்தனார்” என்பார் என்பதும் என்
கருத்துக்கு அரணாக விளங்கும்.
மேற்கூறியவற்றால் சாத்தன் என்ற சொல் புத்தமதத்தவருக்கு வழங்கிவரும்
சொல் என்பது புலனாகும். உண்மை இவ்வாறிருக்க சாத்தன் என்பதற்கு நேரிடையான
பொருள் இருக்க நம் பேராசிரியர் அச்சொல்லிற்கு வலிந்து “மற்கலி” என்று பொருள்
உரைக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவர் மேலும் தனது கருத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக சித்தண்ணவாயிலையும் துணைக்கு
அழைத்திருக்கிறார். அவற்றை ஈண்டு விளக்கி அவர் கருத்து தவறு என்றும் காட்டுதும்.
பேராசிரியர் சித்தண்ணவாசல் ஆசிவகம்ச் சார்ந்தது என்பதற்கு வலுவான இலக்கியச்
சான்றுகளையோ, சிற்பச் சான்றுகளையோக் காட்ட தவறிவிட்டார். சட்டியில்
இருந்தாக் தானே அகப்பையில் வரும். அவரின் கூற்றாக கீழ்வருவதைக் காணலாம்.

“சித்தண்ணவாசல் குடைவரைக் கோயிலின் முற்றத்தில் கிழக்கிலும் - மேற்கிலும்
இருதுறவிகள் தவக்கோலத்தில் இருப்பதுபோல் உள்ளன. இவை இரண்டும் ஆசிவக-
மரபுப்படி, மற்கலி கோசாலருக்கு முன்பிருந்த இரு தீர்த்தங்கரர்களாக இருத்தல்
வேண்டும். அவர்களில் ஒருவர் “பார்சுவநாதர்”. இரண்டாமவர் யாரென்பது இன்னும்
புதிராகவே உள்ளது. மூன்று சிலைகளுமே தவக்கோலத்தில் உள்ளன. அவற்றுள்
நடுநாயகமாக உள்ள சிலை “முக்குடை”யின் கீழ் அடைக்கப்பட்டுள்ள தன்மையே
அச்சிலைக் குரியவரின் தலைமைப் பண்பை உணர்த்துவதாக உள்ளது”.

- “சங்ககாலத் தமிழர் சமயம்”, பக்கம்: 19.
இந்த இடத்தில் ஆசிரியரின் உண்மை மனப்பான்மை வெளிப்படுகிறது. ஆசிவக
மரபு யாது என்பதை விளக்காமல் “ஆசிவகமரபுப்படி” என்று எழுதுகிறார். தவக்கோலத்தில்
இருதுறவிகள் இருக்கும் அந்தச் சிற்பங்கள் யாரைக் குறிக்கும்? எனில், அந்த சிற்பங்கள்
சமணம் சார்ந்த துறவிகளைக் குறிக்கும். ஏன் பேராசிரியர் சொல்வதுபோல் ஆசிவகத்தைக்
குறிக்காதா என்றால்? குறிக்காது. அவற்றை ஈண்டு காட்டுதும்.

1. “முக்குடை” - மூன்று குடைகள். இம்மூன்று முடைக்களுக்கும் முறையே
சந்திராதித்யம், சகலபாசனம், நித்தியவிநோதம் என்பன பெயர்களாகும். அருக
பெருமானுக்கே உரித்தான ஒன்று. அருகருக்கு சிறப்பாக கூறப்படும் அதிசயங்களில்
ஒன்று! அருகன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாகையால் குறியீடாகக் முக்குடைகள்
அமைப்பது ஜைன சம்பிரதாயம். சிற்ப சாத்திரத்தில் அருகனுக்கே இக்குறியீடு உண்டு.
இந்திய வரலாற்றில் வேறு எந்த கடவுளுக்கும் இந்த குறியீடு கிடையாது.
அப்படியிருக்குமானால் அவற்றை சுட்டினால் அமைய பெறுவேன்.

2. “பஞ்ச மந்திரம்” சமணத்தின் மூல மந்திரமாகும்.
“நமோ அரகந்தாணம்
நமோ சித்தாணம்
நமோ ஆயிரியாணம்
நமோ உவச்சாயாணம்

நமோ லோயே சவ்வசாகுணம்”. இப்பாடல் ஐந்து குரவர்களை வணங்குகிறது.
இவர்களில் அருகரும், சித்தரும் முத்தியடைந்தவர்கள். மற்ற மூவரும் முத்தி நிலையடைய
பயணிப்பவர்கள். ஜைன சிற்ப சாத்திரப்படி அருகர் சிலைக்கு மேலே முக்குடைக் காட்டப்படும்.
சித்தருக்கு உருவம் இல்லையால் அவருக்கு சிலைகள் கிடையா. மற்ற ஆச்சாரியர், உபாத்தியாயர்,
சாதுக்கள் ஆகியவர்களின் சிறபங்களில் ஒன்று அல்லது இரண்டு குடைகள் காட்டப்பட்டிருக்கும்.
சிற்றண்ணவாசலில் அமைந்திருக்கும் அச்சிலைகளில் முக்குடைக்கீழ் இருக்கும் சிற்பம் சமண
தீர்த்தங்கரர்களில் கடைத் தீர்த்தங்கரராகக் கருதப்படும் “பகவான் வர்த்தமான மகாவீரர்” ரைக்
குறிக்கும். மற்ற சிற்பங்கள் சமண ஆச்சாரியர்களைக் குறிக்கும்.

3. சமண வரலாற்றின்படி மூன்று காலங்களிலும் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றி
உலக மக்களுக்கு அறமுரைப்பார்கள் என்பது சம்பிரதாயம். அவ்வாறே, நடப்பு யுகமான நிகழ்க்
காலத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றினார்கள். அவர்களின் பெயர்கள் கீழ்வருமாறு.
1. ரிஷப, 2. அஜித, 3. சம்பவ, 4. அபிநந்தன, 5. சுமதி, 6. பத்ம, 7. சுபார்சுவ, 8. சந்திரபிரபா,
9. புஷ்பதந்த, 10. சீதள, 11. சிரேயாம்ச, 12. வாசுபூஜ்ய, 13. விமல, 14. அனந்த, 15. தரும,
16. சாந்தி, 17.குந்து, 18. அர, 19. மல்லி, 20. முனிசுவர்த, 21. நமி, 22. நேமி, 23. பார்சுவ,
24. வர்த்தமான.

இதில் இருபத்து மூன்றாவது, மற்றும் இருபத்துநான்காவது தீர்த்தங்கர்களை வரலாற்றாசிரியர்கள்
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிற்றண்ணவாசலில் உள்ள மற்றொரு சிற்பம் “பார்சுவநாதர்” என்பதை
நம் பேராசிரியர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் யார் அந்த “பார்சுவநாதர்” என்பதை
விளக்கிக் கூறாமலே விட்டுவிடுகிறார். சரி. இந்த சிற்பம் யாரைக் குறிக்கிறது? இந்த சிற்பம்
இருபத்துமூன்றாம் சமண தீர்த்தங்கரரான “பார்சுவநாதரை”க் குறிக்கிறது. சிற்பச் சாத்திரப்படி
பார்சுவநாதருக்குதான் தலைமேல் பாம்புப்படம் காட்டப்பட்டிருக்கும். புத்த பெருமானுக்கும்* சில
சமயம் காட்டப்படுவதுண்டு. ஆனால் குறிப்பாக சமண தீர்த்தங்கரரான “பார்சுவநாதருக்கு” உரித்தான
ஒன்று. நம் பேராசிரியர் கூற்றுப்படி சிற்றண்ணவாசல் ஆசிவக சார்ந்ததென்றால் சமண தொடர்புடைய
“முக்குடை நாதன் மகாவீரர்”, “பார்சுவநாதர்” சிற்பங்கள் ஏன் இங்கு இடம் பெற்றுள்ளன? என்பதற்கு
நம் பேராசிரியர் விளக்கவேண்டும்.

(* மருத்துவர் ஐயா கூறுவதுபோல)

4. பிண்டி என்பது அசோக அரம். பிண்டி அருகருக்கே உரித்தானது. இதையும் நம் பேராசிரியர்
ஆசிவகத்திற்கு ஏற்றிச் சொல்கிறார். சரி, சமண தமிழ் இலக்கியங்களில் பிண்டி, முக்குடைப் பற்றியப்
பாடல்கள் பரவலாக வழங்கி வருவதையும் பார்க்கலாம்.
அ.” மின்னார் முத்து மணிமாலை
மிளிருங் குடைமூன் றுடையானை
…. ”
- தோத்திரத் திரட்டு

ஆ. “பெருநாள் மதிபோல் நிலவுமுக் குடையாய்
பிழைபடா நெறியாய் பிறவிவேர் குறுவாய்
முருகுலா மலர்மேல் வருதிக பரனே!”
- மந்திரப் பத்து

இ. ” முத்தொளி முக்குடையாய் மூவுலகு ஆளுடையாய்
உத்தமனே அருகா உன்பதமே சரணம்
….. !”
- சரணப் பத்து

ஈ. ” திகழ்பூப் பிண்டி நிழலுடையாய்
திக்கே யுடையாய் முக்குடையாய்
……….!”
- அருகர் பத்து

உ. ” பேதையர் காதம் பிணைக்கறுக்கும் பூம்பிண்டி
நாதனை முக்குடைக்கீழ் நாயகனைக்-காதிவினை
………!”
- திரு இரட்டை மணி மாலை

ஊ. ” உலர்தழைப்ப ஒளிதிகழ்மூ வாமதிமுக் குடையானை அடலார் ஆழ்
வலர்தழைக் கும்வண் மயிலை மன்னவனை, மணியை, முன்னாது
……!”
- திருமயிலாப்பூர்ப் பதிகம்

எ. ” கொலையிலா நெறிவேந் தனே ஒளி
குலவு முக்குடை யாளனே!
நிலையனே திருமயிலை மேவிய
நேமி நாத சுவாமியே!”
- திருமயிலை நேமிநாதசுவாமி பதிகம்

ஏ. ” முத்தணிந்த முக்குடைக்கீழ் மூர்த்தி திருவடியைப்
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டெருத்தின்
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காதார் அன்றே!”
- சீவக சிந்தாமணி (2740)

5. “திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்பது சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் முதல் பாடலாக வரும் பாட்டு. இந்தப் பாட்டில்
கூறப்பட்டிருக்கும் தெய்வம்தான் என்னை? இதற்கு எந்த பேராசிரியரிடமும் போக வேண்டாம்.
இந்தப் பாட்டு “அருக பகவானை”ப் போற்றுகிறது. இதில் ஐயத்திற்கு கிச்சித்தும் இடனில்லை. இந்தப்
பாட்டு அருகனைத்தான் குறிக்கிறது என்பதற்கு, இந்தப் பாட்டில் “Key word”ஆக இருக்கும்
“திரு முக்குடை”, ” பிண்டி”, “அறிவனை”, “கந்தன் பள்ளி” என்ற சொற்களுக்கு விளக்கம் பெற
புகுந்தாலே உண்மைப் புலப்படும். ஆனால் ஏனோ நம்ம பேராசிரியர் இச்சொற்களை ஆசிவக
நிறுவனரான மற்கலியைச் சுட்டுகிறது என்கிறார். அதற்கு அவர் ஆதாரம் தரவில்லை.
மாறாக, மேலே சொன்ன முக்கிய சொற்கள் சமண இலக்கியங்களில் விரவி வருவதைக்

காணலாம். மேலும், அறிவன் என்ற சொல் அருகர், புத்தரரைக் குறிக்கும் தனிச் சொல். பின்னாளில்
எல்லா மதங்களும் அச்சொல்லை உள்வாங்கிக் கொண்டன. உண்மை இவ்வாறு இருக்க நம்ம
பேராசிரியரோ அச்சொற்கள் ‘மற்கலி கோசரை” குறிக்கிறது என்கிறார். இது முழுப் பூசணிக்காயை
சோற்றில் மறைப்பது போலாகும்.

சமணத்திற்கு இதுவொன்றும் புதிதல்ல. சமண நூற்களும், கோயில்களும் சைவமாகியது போல
இப்போது ஆராய்ச்சி என்ற பெயரில் நம் பேராசிரியர் அவர்கள் தன் மனம் போன போக்கில்
ஆசிவகத்திற்கு ஏற்றிச் சொல்கிறார். இது எதைக் காட்டுகிறது என்றால்? சமணத் தொடக்கமே
தமிழர் வரலாறு ஆகும் என்பதை மறைக்கவேயன்றி வேறில்லை எனலாம்.

வாழ்க திருவறம்! அறம் மறவற்க!!

அன்புடன்,
இரா.பானுகுமார்,
சென்னை.

Books available at:

Paam,
E/7. Bharath Apartments,
R.V.Nagar,
Anna nagar -East, chennai 102.

Leave a Reply





Archives and Links