தமிழரின் திருப்புமுனை

தமிழ் இந்து

admin's picture

தமிழ் இந்து

போகப் போகத் தெரியும் - 5

Posted: 04 Jan 2009 06:56 PM CST

This content is provided by you by http://www.tamilhindu.com/ . Please
inform editor [at] tamilhindu.com in case you are not reading this in
an RSS reader or an aggregator, but from another blog or a web site.
Thanks

சரியும் விக்கெட்டுகளும் சாத்வீகப் பெரியாரும்

ராட்சச மன்னனால் கட்டளையிடப்பட்ட இந்திரஜித்து தந்தையாரின் கட்டளையைச்
சிரமேற்கொண்டு யாகத் தலத்தில் முறைப்படி அக்கினியில் ஹோமம் செய்தான்…

அக்கினி பகவான் வெளிவந்து வலமாய் வரும் ஜ்வாலையோடு சுத்தப் பொன்னை
நிகர்த்தவராய் ஹவிஸை நேரிலேயே வாங்கிக்கொண்டார்.

- எண்பதாவது சர்க்கம், யுத்த காண்டம் / வால்மீகி ராமாயணம்.

இறைவன் அறம் வளர்த்த அண்ணலாக அவதாரம் செய்தான். அவனுக்கு எதிரே ராவணனின்
படை. அது அநீதியின் முகாம். தங்களுக்கு வலு ஏற்றுவதற்காக அவர்கள் செய்தது
யாகம்; அதுவும் வேத முறைப்படி. மதச் சடங்குகளும் சண்டித்தனமும் ஒருபுறம்
இருக்க, மனிதப் பண்புகளும் விலங்குகளும் இறையருளும் இன்னொரு பக்கமுமாக
நடந்துதான் ராமாயண யுத்தம். இதில் யாரை ஆதரிப்பது என்ற தெளிவு இல்லாமல்
தொடர்ந்து சேம்சடு கோல் போடுபவர்கள்தாம் திராவிடக் கழகத்தினர். ராவணன்
தரப்பு யாகம் வளர்த்தது என்பதை இவர்கள் மறைத்துவிடுகிறார்கள்.

இத்தகைய குளறுபடிகளையும் இந்த இயக்கத்தின் தலைவரான ஈ.வே.ரா.வின்
முரண்பாடுகளையும் இப்போது பார்க்கலாம்…

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு காலை நேரத்தில் பேசினார் சுப. வீரபாண்டியன்.
அவர் ஈ.வே.ரா குறித்த தகவல் ஒன்றைக் கூறினார். திராவிடர் கழகம் நடத்திய
கூட்டமொன்றில் யாரோ ஒருவர் ஈ.வே.ராவைக் கேள்வி கேட்டாராம். அத்தனை
கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த ஈ.வே.ரா, தன்னை ஆதரித்துக்
கைதட்டியவர்களைக் கண்டித்தாராம். கைதட்டலால் கேள்வி கேட்டவரின் உணர்வுகள்
பாதிக்கப்படும் என்றாராம் அவர்.

அதாவது, பிறரது உணர்வுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து நடந்து
கொண்டார் ஈ.வே.ரா. என்பதுதான் இந்த நிகழ்விலிருந்து அறிய வேண்டிய நீதி.
இது நடந்திருக்கலாம். பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பை அன்று
அவர் காட்டியிருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்து மற்றும் பேச்சுகளின்
தொகுப்பை பார்த்தால் இந்த நிகழ்ச்சி அபூர்வமாகத்தான் தெரிகிறது.

சரிந்து விழும் பகுத்தறிவு இயக்கங்களைத் தூக்கி நிறுத்தச் சமீப காலமாக
இப்படிச் சில கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றன. கேள்வி கேட்பதையே
குறிக்கோளாக வைத்திருந்த ஈ.வே.ரா.வை கேள்விக்கு அப்பாற்பட்டவராக்கும்
திட்டம் இது. இதற்கான அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதே இந்து
எழுச்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

"நான்கு இளைஞர்களைச் சந்தித்தால் அதில் மூன்று பேர் சபரிமலைக்கு மாலை
போட்டிருக்கிறார்கள், நான்காமவர் மேல்மருவத்தூர் யாத்திரை போகிறார்.
இனிமேல் இங்கே நாத்திகம் எடுபடாது" என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்
திராவிடத் துண்டை தோளில் போட்டிருக்கும் தெற்கத்திக்காரர்.

ஆள் இல்லை என்றவுடன் ஆலாபனை மாறுகிறது. விக்கெட்டுகள் சரிவதால்
விளையாட்டில் வேகம் குறைகிறது. கலகப் பெரியார் சாத்வீகப் பெரியாராக
உருமாற்றம் அடைகிறார். இதைக் கண்டு தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதே
இந்தக் கட்டுரையின் நோக்கம். சாத்வீகத் தோற்றத்திற்கு சரியும்
விக்கெட்டுகள்தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும்
இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால்
உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக்
கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.

தலைமைக்குத் தெரிந்த விவரம் தொண்டர்களுக்குத் தெரிய ஐம்பது ஆண்டு காலம்
ஆகியிருக்கிறது. ஈ.வே.ரா.வின் பேச்சைப் பதிவு செய்த கவிஞர் கருணானந்தம்
எழுதுகிறார்:

பெரியார் சேலம் அன்னதானப்பட்டியில் 01.07.1963 அன்று திருவண்ணாமலை
தேர்தல் பிரசாரம் பற்றிக் குறிப்பிட்டார். "நான் பத்தாயிரம் பேர் அடங்கிய
பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவன் அதோ எம்.ஜி.ஆர்.
என்று கூவிக் கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர் கூட மீதி இல்லை.
அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை
என்று திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்றாக வெளுத்து
வாங்கிவிட்டேன்" என்றார்.

- பக்கம் 387 / தந்தை பெரியார் / கவிஞர் கருணாநந்தம்

ஆய்வுப் பணிகளில் அக்கறை உள்ளவர்கள் சுப. வீரபாண்டியனின் பெரியாருக்கும்
கவிஞர் கருணாநந்தத்தின் பெரியாருக்கும் உள்ள கால வேறுபாடுகளையும்
கோளவேறுபாடுகளையும் சீர்தூக்கிப் பார்க்கலாம். மற்றபடி மனித
நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து
என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும்
கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை.

ஈ.வே.ரா. நம்பியது என்ன, அவரால் நடத்தப்பட்டது என்ன அவருடைய கொள்கை என்ன
என்பதைப் பற்றி அறிய வரலாற்றின் சில பக்கங்களைப் பார்க்கலாம்.

மதுவிலக்கு தேசிய உணர்வு என்று காங்கிரஸ் கட்சியோடு கலந்திருந்த
ஈ.வே.ராவுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது 1925ல். அப்போது காங்கிரஸ்
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார் ஈ.வே.ரா. கட்சியின் ஆதரவோடு
சேரன்மாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார் வ.வே.சு. அய்யர். இந்தப்
பள்ளியில் உணவு வழங்கும் முறை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.

காங்கிரஸில் பொறுப்பில் இருந்த பிராமணர்கள் இந்த விஷயத்தில் சாதி
அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி ஈ.வே.ரா, சாதி ஒழிய வேண்டும் என்ற
தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநாட்டில்
வகுப்புவாரி பிரதிநித்துவ தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவு
இல்லாததால் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அவர் சுட்டிக்காட்டிய குறைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கலாம்
என்பதே நம்முடைய கருத்து. இதுபற்றியும் சேரன்மாதேவி விவகாரம் பற்றியும்
இன்னொரு முறை பார்க்கலாம். இப்போதைக்கு இந்தத் தடத்திலேயே போகலாம்.

காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈ.வே.ரா சமதர்மத்திற்குப் பாடுபடுவதே
தன்னுடைய நோக்கம் என்றார். நீதிக்கட்சியோடு உறவு கண்டார்.

காங்கிரசுக்கு மாற்றாக ஈ.வே.ரா. தேர்ந்தெடுத்த நீதிக்கட்சியின் அரசியல்
நிலப்பாடு பற்றி மார்க்சிய சிந்தனையாளர் அருணன் எழுதுகிறார்:

சொல்லளவில் மட்டுமல்ல செயலளவிலும் ஏகாதிபத்தியதாசனாகவே இயங்கி வந்தது
நீதிக்கட்சி. அதுவும் எந்த அளவிற்கு என்றால் மிகக் கொடூரமான ரெளலட்
சட்டத்தினை ஆதரிக்கும் அளவிற்கு. "சுட்டேன், சுட்டேன்; குண்டுகள்
தீரும்வரை சுட்டேன்" எனக் கொக்கரித்தானே ஜெனரல் டயர் 1919 ஆம் ஆண்டு!
அந்த ஜாலியன்வாலபாக் படுகொலையினை ஆதரித்து அறிக்கை விடும் அளவிற்கு!
அதிலும் கட்சியின் சார்பில் அறிக்கை விட்டவர்கள் யார் தெரியுமா?
இன்றைக்கும் "திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்கள்" என்று எவரை
திராவிட இயக்கத்தவர்கள் புகழ்ந்துரைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த
தியாகராசச் செட்டியாரும், டி.எம். நாயரும்தான்.

- பக்கம் 19 / திராவிட இயக்கம் – ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

நீதிக்கட்சியோடு உறவு கண்டதால் ஈ.வே.ராவின் கொள்கை நிறைவேறியதா? வைர
மோதிரங்களையும், சரிகைத் தொப்பிகளையும் வயலில் இறக்கிவிட முடிந்ததா
என்கிற கேள்விகளுக்கு விடை காண மீண்டும் அருணனைப் பார்ப்போம்:

1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆண்டு
மாநாட்டிற்கு பெரியார் தனது சமதர்ம கட்சியின் திட்டத்தை அனுப்பி வைத்து
அதனை ஏற்றுக் கொள்ளும்படிக் கோரியிருந்தார். ஆனால் நாம் ஏற்கனவே சுட்டிக்
காட்டியிருந்தது போல் ஆலை அரசர்களாலும், மிட்டா மிராசுகளாலும்
நிறைந்திருந்த நீதிக் கட்சியின் தலைமையால் சமதர்மக் கட்சியின்
புரட்சிகரமான திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இங்கே நடந்த
விந்தை என்னவென்றால், பிராமணரல்லாதார் நலன் காத்தல் எனும் கோஷத்தோடு
பாட்டாளி வர்க்கக் கோட்பாடுகளை முன்வைத்த பெரியார் நீதிக்கட்சியின் தலைமை
ஏற்றுக் கொள்ளும் வகையில் அதனை வெட்டிச் சுருக்கி மாற்றியமைத்து
விட்டார். "இது சமதர்மக் கொள்கையின் அடிப்படை அம்சத்தையே கை
கழுவுவதாகும்" என்று சிங்காரவேலர் பெரியாரைக் கண்டித்திருக்கிறார்.
"சுயமரியாதை இயக்கம், அவமரியாதை இயக்கமாகிவிட்டது" என்றுகூட அவர்
கூறியிருக்கிறார்.

பெரியாரின் இந்தத் தவறான பாதையைக் கண்டு வெறுப்புற்று இது "கோழைத்தனமான
பின்வாங்கல்" என்று அவரைக் கண்டித்து ஜீவாவும், ராகவனும், நீலாவதியும்,
வல்லத்தரசும் பெரியாரிடமிருந்து விலகி "சுயமரியாதை சமதர்மக் கழகம்" என்று
தனிக் கழகத்தினை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி திராவிட இயக்கத்தினை ஒரு பாட்டாளி வர்க்க அடிப்படையில் நடத்திச்
செல்ல நடந்த ஒரு முயற்சி அகால மரணம் எய்திவிட்டது.

- பக்கம் 39,40 / திராவிட இயக்கம் - ஒரு மார்க்சீய ஆய்வு / அருணன்

மேலும் சில விவரங்களை அடுத்த முறை பார்க்கலாம். அதுவரை பொறுக்க முடியாத நண்பர்கள்

1) கண்ணில்பட்ட குடியரசு / முருக. இராசாங்கம் / குடந்தை செங்குயில் பதிப்பகம்
2) ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் / ம.வெங்கடேசன் / பாரதீய பார்வர்டு பிளாக்

ஆகிய புத்தகங்களைப் படித்துப் பயன் பெறலாம்.

மேற்கோள் மேடை:

உண்மைக்கும் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக தி.மு.க. வினருக்கும் உள்ள
உறவு எப்பேர்ப்பட்டது என்பது நாடறிந்த விஷயம்.

- மன்னையாரின் நினைவுக்கு / குமுதம் தலையங்கம் / 24.01.1974

User login

To prevent automated spam submissions leave this field empty.

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's online

There are currently 0 users and 14 guests online.

Syndicate

Syndicate content